WELCOME TO NADAR IYYANAR
காவேரி பொழில்சூழ் மகாமகம் சிறப்புடைய கும்பகோணத்திற்குத் தென் கிழக்கே 8 மைல் தொலைவில் திருநாகேஸ்வரம், ஸ்ரீஉப்பிலியப்பன் சுவாமி கோவில் , அய்யாவாடி, முருக்கங்குடி அடுத்து நடார் என்னும் கிராமம் உள்ளது. வடக்கே திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி, தெற்கே துக்காச்சி ஸ்ரீதுர்க்கை அம்மன், கிழக்கே அம்மன்குடி ஸ்ரீஅஷ்டபுஜதுர்க்கை அம்மன், மேற்கே ஸ்ரீஉப்பிலியப்பன் கோவில், ஆகிய சிவவைணவத் தலங்களுக்கு நடுவில் அமைந்துள்ளதால் இவ்வூர் நடு ஊர் என்பது மருவி (நடார்) என்ற திவ்யத் தலமாக விளங்குகிறது. மேலும் வடக்கே நாட்டாறு, தெற்கே அரசலாறு ஆரம்போல் பாய்வதால் (நடு ஆரம்) “நடார்” என்றும் விளங்குவதாக ஆன்றோர்களின் வாக்கு.
திருநாகேஸ்வரம், முருக்கங்குடி, அம்மன்குடி சாலையில் இந்த நடார் கிராமத்தின் நுழைவாயில் (வளைவு) அமைந்துள்ளது. ஊருக்குள் முன்னதாக ஸ்ரீசித்திவிநாயகர் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகின்றார். இவரை சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேகம்செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் அனைத்தும் குறைபாடின்றி இனிதே நடக்கும்.
மேலும் ஸ்ரீகருகமாணிக்கப்பெருமாள் ஆலயம், ஸ்ரீசிந்தாமணி அம்பிகா சமேத ஸ்ரீமணிகண்டேஸ்வர சுவாமி ஆலயம், ஸ்ரீபூர்ணபுஷ்களாம்பிகை சமேத ஸ்ரீஹரிஹரபுத்திர ஸ்வாமி (ஸ்ரீஅய்யனார்) ஆலயம் உள்ளது.
ஸ்ரீமணிகண்டேஸ்வர சுவாமி ஆலயம் அருகிலேயே ஸ்ரீஅய்யனார் ஆலயம் அமைந்து இருப்பது இவ்வூரின் மிகச்சிறப்பாகும்.
|